ஆறகழூர் வணிக கல்வெட்டு , வணிக குழு கரண்டி
நான் கண்டுபிடித்த இந்த செய்தி காலைக்கதிர், தினமணி,தினமலர், மாலைமலர், ஆகிய நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது
2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்குவைகள் ஏற்காட்டில் கண்டுபிடிப்பு
ஏற்காட்டை சுற்றி உள்ள மலைக்கிராமங்களில் 20 க்கும் மேற்பட்ட கற்குவைகளும் ,கற்திட்டைகளும், புதிய கற்கால கருவிகளும், நடுகல்லும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், கலைச்செல்வன் ஆசிரியர், பெருமாள் ஆசிரியர், சுகவன முருகன் ஆசிரியர், மருத்துவர் பொன்னம்பலம், சீனிவாசன், ஜீவநாரயணன், பெரியார் மன்னன் ஆகியோர் அடங்கிய குழு ஏற்காட்டை சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் ஆய்வினை மேற்கொண்டது. அப்போது மோட்டூர், தங்கமலை, நல்லூர், மேலூர், வெள்ளக்கடை, செம்மநத்தம், போன்ற கிராமங்களில் கற்குவை, கல்திட்டை, புதிய கற்காலகருவிகள்,குத்துக்கல், நடுகல் போன்றவற்றை கண்டறிந்தனர்.
ஈமச்சின்னங்கள்:
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த மக்கள் தங்கள் கூட்டத்தில் முக்கியமானவர்கள் இறந்தபோது அவர்கள் நினைவாக அவர்களை அடக்கம் செய்த இடத்தில் கற்குவை, கல்திட்டை, கல்பதுக்கை, கல்வட்டம், முதுமக்கள் தாழி ,குத்துக்கல் போன்ற நினைவுச்சின்னங்களை அமைத்தனர். நாடோடிகளாய் வாழ்ந்தபோது விலங்குகளை வேட்டையாட கல்லால் ஆன கருவிகளை பயன்படுத்தினர். இறந்தவர்களை புதைத்தபோது அவர்கள் பயன்படுத்திய கருவிகளையும் ,அவர்களுடன் பழகிய விலங்குகளையும் உடன் புதைத்தனர்.
கற்குவைகள் :
2,500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் தன் கூட்டத்தில் இறந்தவருக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னம் கற்குவையாகும்.இவை பிரமீடு வடிவில் ஒன்றன் மீது ஒன்றாய் செவ்வக வடிவ கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது.இவை எகிப்தில் உள்ள பிரமீடுகளை போன்று அளவில் சிறியதாக உள்ளது. ஏற்காடு வெள்ளக்கடையிலிருந்து மோட்டூர் போகும் வழியில் மேலூர் கிராமத்தில் கல்திட்டையுடன் இணைந்த ஓர் கற்குவை கண்டறியப்பட்டது. மோட்டூர் கிராமம் சேட்டுப்பட்டி மலைப்பகுதியில் ஒரு கற்குவையும் குத்துக்கல்லும் உள்ளது.இந்த குத்துக்கல்லின் உயரம் 60 செ.மீ.மோட்டூர் கிராமத்தின் மலைப்பகுதியில் ராமர் கோயில் என்ற இடத்தில் பத்து கற்குவைகள் காணப்படுகின்றன. இவற்றில் 7 பெரிதாகவும் 3 சிறிதாகவும் உள்ளது.
மிகப்பெரிய கற்குவை ஒன்று கல்திட்டையுடன் இணைந்து இங்கு கண்டறியப்பட்டது. இதற்க்கு ஒரு வாயிலும் அதன் உள்ளே புதிய கற்கால கருவிகளும் காணப்படுகின்றன. இதன் உயரம் 300செ.மீ, அகலம் 200 செ.மீ,முன்புற வாயில் 100 செ.மீ ஆகும். இதை இங்குள்ள மக்கள் ராமர் கோயில் என அழைக்கின்றனர். வருடம் ஒருமுறை இங்கு வந்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இந்த இடத்திலிருந்து மலை உச்சியில் 3 கி.மீ உயரத்தில் தங்கமலை என்ற இடத்தில் 7 கற்குவைகள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் உயரம் 150 செ.மீ, சுற்றளவு 295 செ.மீ ஆகும்.
கல்திட்டைகள்:
இறந்தவர்களின் நினைவிடங்களில் கல்திட்டைகள் அமைக்கப்பட்டன. இவை மூன்று புறமும் பலகைகற்கள் வைக்கப்பட்டு மேலே ஒரு பலகைக்கல்லால் மூடப்பட்டு உள்ளன. இதற்கு முன்புறம் ஒரு வாசல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே புதிய கற்கால கருவிகள் உள்ளன. மக்கள் இதை வழிபடுகின்றனர். ஆத்தூர் தாலுக்கா கெராங்காடு, பெத்தநாயக்கன் பாளையம் தாலுக்கா சேவூர் கிராமங்களில் இந்த கல்திட்டைகள் பாண்டியன் வீடு,குள்ளபாண்டி வீடு, சின்ன பாண்டி வீடு என அழைக்கப்படுகிறது. ஆனால் ஏற்காடு பகுதியில் இவை ராமர் வீடு எனவும், திருவண்ணாமலைப்பகுதியில் பஞ்ச பாண்டவர் வீடு எனவும் அந்தந்த பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.பழங்காலத்தில் குள்ள மனிதர்கள் இதில் வசித்ததாகவும் இவர்கள் நம்புகின்றனர்.ஏற்காடு பகுதியில் கல்திட்டைகள் கற்குவையுடன் இணைந்தே காணப்படுகிறது.
புதிய கற்கால கருவிகள்:
புதிய கற்காலம் என்பது கி.மு. 10,000 க்கும் கி.மு. 4,000க்கும் இடைப்பட்ட காலமாகும்.இந்த புதிய கற்கால கருவிகள் 6,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.இராபர்ட் புருஷ்பூட் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில் பல்லாவரம் அருகே அத்திரப்பாக்கம் என்ற இடத்திலும் ,திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர் தேக்கத்து அருகே உள்ள குடியம் குகைப்பகுதியிலும் முதன்முதலில் கி.பி.1863 ஆம் ஆண்டு புதிய கற்கால கருவிகளை கண்டுபிடித்தார். ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள நல்லூர், தங்கமலை, மோட்டூர் போன்ற கிராமங்களில் புதிய கற்கால கருவிகள் காணப்படுகின்றன.இந்த புதிய கற்கால கருவிகளின் ஒருமுனை கூராகவும் மறுமுனை தட்டையாகவும் உள்ளது. கூரான பகுதி குத்தி கிழிக்கவும் ,தட்டையான பகுதி வெட்டவும் பயன்பட்டன.ஒருசில நீள் உருண்டை வடிவ கருவிகள் தானியங்களை நசுக்கவும் அரைக்கவும் பயன்பட்டிருக்கலாம்.
காட்டுப்பன்றிகுத்திபட்டான் நடுகள்:
ஏற்காடு மலையில் குழுவி என்ற மலைக்கிராமத்தில் ஊர் பொது கிணற்றின் அருகே ஒரு நடுகல் கண்டறியப்பட்டுள்ளது.இது காட்டுப்பன்றிகுத்திபட்டான் நடுகல் ஆகும். இது 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். வலக்கையில் வில்லை பிடித்தபடியும் இடக்கையில் நாணை இழுத்தபடியும் அம்பு விட தயார் நிலையில் ஓர் ஆண் நிற்கிறான்.அவன் எதிரே ஒரு காட்டுப்பன்றி அவனை தாக்க வருவது போல் நடுகல் சிற்பம் அமைந்துள்ளது. அவ்வூரில் விளைநிலங்களில் உள்ள பயிர்களை காட்டுப்பன்றிகள் வந்து சேதப்படுத்தியிருக்க கூடும்,அவற்றை எதிர்த்து வேட்டையாடும் போது இந்த வீரன் காட்டுப்பன்றியை கொன்று தானும் இறந்திருக்கலாம். அந்த வீரன் நினைவாக வைக்கப்பட்டுள்ள நடுகல் இதுவாகும்.
மக்கள் வாழ்கைமுறை:
மலைப்பகுதியில் நாகரீகத்தின் தாக்கம் வந்து விட்டாலும் கூட இன்னும் சில பழமையின் சுவடுகள் அங்குள்ளன. மோட்டூர் கிராமத்தில் பழமையான வட்ட வடிவ கூரை வீடுகள் சில உள்ளன. இந்த ஊர் மக்கள் வெளியூரில் இருந்து பெண் எடுப்பதும் இல்லை,பெண் கொடுப்பதும் இல்லை. இங்கு மார்ச் மாதம் திருவிழா கொண்டாடுகிறார்கள் .அந்த கோயில் மாரியம்மன் கோயில் என்று சொல்லப்பட்டாலும் கருவறையில் புதிய கற்காலகருவிகளே மூலவராக உள்ளது. இந்த திருவிழாவின் போது ஒவ்வொரு குடும்பமும் 5010 ரூபாய் கொடுக்கிறார்கள் .பண்டிகை முடிந்ததும் அந்த பணத்தை ஊரில் கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு மிக குறைந்த வட்டிக்கு கொடுக்கிறார்கள். ஏன் இந்த பழக்கம் என ஊர் பெரியவரிடம் கேட்ட போது , சில நூறு ஆண்டுகளுக்கு முன் மழை இல்லாமல் பயிரிட முடியாத போது பலர் தங்கள் நிலங்களை அடகு வைத்து கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாமல் நிலங்களை இழந்திருக்கிறார்கள். அப்போது முதல் இப்படி வசூல் செய்து கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு உதவுகிறோம் என்றார்.
இந்த பகுதிகளில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று ,தொல்லியல் தகவல்கள் கிடைக்கலாம்
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=706811
http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/apr/13/13-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2683802.html
http://www.dinamalar.com/district_detail.asp?id=1749512
கருத்துகள்
கருத்துரையிடுக