சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, ஆறகளூரில், 13ம் நூற்றாண்டை சேர்ந்த வணிக கல்வெட்டு மற்றும் வணிகக் குழு கரண்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலம் வரலாற்று ஆய்வுமைய தலைவரும், தொல்லியல் ஆய்வாளருமான வெங்கடேசன், ஆறகளூரில் ஆய்வு மேற்கொண்டார்.
வணிகக்குழு கரண்டி: காமநாதீஸ்வரர் கோவிலையொட்டி உள்ள தேசாதி பட்டணம் செட்டியார் என்ற குடும்பத்தினர் வசித்து வருவதும், இவர்களது மடத்தில், 15ம் நூற்றாண்டின் சங்கிலியால் இணைக்கப்பட்ட வணிகக் குழு கரண்டி கண்டறியப்பட்டது. இக்குடும்பத்தினர் வழக்குகளை விசாரிக்கும்போது, இந்த கரண்டியை ஒரு மேடையில் வைத்து, தீர்ப்பு சொல்லும் வழக்கம் இருந்ததால், இன்றளவும் புனிதமானதாக கருதுகின்றனர். இந்த கரண்டியின் முனையில் வட்ட வடிவமான குழியும், பெரிய அளவில் சூரியன், சிவலிங்கம், சிறிய அளவில் விநாயகர் உருவம் உள்ளது. இரண்டு கரங்களிலும் அமிர்த கலசம் இருக்கிறது. கைப்பிடி பகுதியில் ஒன்பது பகுதிகளாக பிரித்து, ஒவ்வொரு பகுதியிலும் எடை கல், தச்சரின் கருவி, இரும்பு வேலைக்கான கருவிகள் உள்ளிட்ட வணிக குழு சின்னங்கள் உள்ளன. கடல் வணிகம், எண்ணெய் வணிகம், இசை கருவிகள், தராசு போன்றவை காட்டப்பட்டுள்ளன. முதல் பிரிவில் மூன்று ஆண்கள் நிற்பது போல் உள்ளதால், இவர்கள் வணிக குழு தலைவராக இருக்கக்கூடும். இந்த சான்றுகள் மூலம், ஆறகளூர் வணிக நகரமாக இருந்தது உறுதியாகிறது. 12ம் நூற்றாண்டில், பொன்பரப்பின வாணகோவரையன் என்ற மன்னன் ஆறகளூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளார். இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால், பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக