ஆறகழூர் கோட்டை
ஆறகழூரில் கோட்டை இருந்ததற்கான தடயங்கள் வெளிப்படையாய் இப்போது இல்லை. கோட்டைக்கரை என்ற பெயர் மட்டுமே இங்கு கோட்டை இருந்ததற்கான ஆதாரமாய் உள்ளது.கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் மகதை மண்டலத்தின் தலைநகராக இருந்துள்ளது. தலைநகர் என்பதால் நிச்சயம் கோட்டை இருந்திருக்க வேண்டும். கோட்டைக்கரையில் வீடு கட்ட கடைக்கால் எடுக்கும் போது கல்தூண்கள் , அலங்கார வளைவு கற்கள் கிடைத்துள்ளன. எனவே கோட்டைக்கரை, மற்றும் அரசு பள்ளி இருக்கும் இடம் கோட்டை பகுதியாக இருந்திருக்க வாய்ப்புண்டு..
கோட்டையை சுற்றி பாதுகாப்புக்காக அகழிகள் இருந்துள்ளது ஆறு+அகழ்+ஊர்= ஆறகழூர் என்றும் ஆறே அகழியாக அமைந்ததால் ஆறகழூர் என பெயர் பெற்றது என்ற கருத்துக்கள் உண்டு
17 ஆம் நூற்றாண்டில் வேணுவராயன் என்ற சிற்றரசன் கோட்டை கட்டிக்கொண்டு அரசாண்டதாக லெபான் குறிப்பிடுகிறார். திப்புசுல்தான் இங்கு வரும்போது கல்வராயன் மலைப்பகுதிக்கு ஓடிவிட்டான் என்று சொல்லப்படும் செய்தியால் வேணுவராயன் காலம் திப்புசுல்தான் இறந்த 18 ஆம் நூற்றாண்டாகலாம்..ஆறகழூர் திருகாமீசுரமுடைய நாயனார் கோயிலின் தென்புற சுவரின் அருகே உள்ள பகுதி துலுக்கண் தோட்டம் என அழைக்கப்படுவது கவனிக்கத்தக்கது.
வேணுவராயனுக்கு முன்பே ஆறகழூர் கோட்டையுடன் கூடிய கோநகராக இருந்துள்ளது. ரிச்சர்ட் சேலம் புராணத்தில் ஆறகழூர் ஏகாம்பர முதலியார் என்பவரின் கோநகராக இருந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். ஏகாம்பர முதலியாரை கெட்டி முதலியார் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை ஏற்றுக்கொண்டால் ஆத்தூரில் கெட்டி முதலிகள் வலிவோடு விளங்கிய காலத்தில் அவர்களுக்கு துணையாக ஒரு பாதுகாப்பு அரணாக ஆறகழூர் கோட்டை இருந்திருக்கலாம்.
தொடர் ஆய்வுகள் ஆறகழூர் கோட்டை பற்றிய செய்திகளை வெளி கொணரலாம்.
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்
#ஆறகழூர்பொன்வெங்கடேசன்
கருத்துகள்
கருத்துரையிடுக