முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு-aragalur

 ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு



விழுப்புரம் வீரராகவன் சார்,ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
ஆய்வின் போது
ஆறகழூர் வாண்டையார் கல்வெட்டு
கி.பி 12 ஆம் நூற்றாண்டில் மகதை மண்டலத்தின் தலைநகராய் ஆறகழூர் இருந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின் தன் பெருமையையும் முக்கியத்துவத்தையும் இழந்தது. இருப்பினும் இங்குள்ள கோயில்களும் ,கல்வெட்டுகளும் தம் பெருமையை இன்னும் நிலை நாட்டிக்கொண்டு உள்ளன.

காடுகளிலும், வயல்வெளிகளிலும் இன்னும் வரலாற்று சான்றுகள் ஒளிந்து கிடக்கின்றன. இப்படி வயல்களில்,வரப்பில் இருந்த 5 கல்வெட்டுகளை சேலம் வரலாற்று ஆய்வு மையம் கடந்த சில ஆண்டுகளில் கண்டறிந்து வெளிப்படுத்தியது. ஊருக்குள் வெளிப்பாளையம் என்ற இடத்தில் வயலுக்கு உள்ளே ஒரு நவகண்ட சிற்பம் இருந்தது.அதை பல முறை பார்த்துள்ளேன்.அதை சுற்றி எப்போதும் புல் முளைத்து கிடக்கும்.சமீபத்தில் அந்த இடத்தை சுத்தம் செய்த போது ஒரு எழுத்துள்ள கல் இருப்பது தெரிந்தது. எங்க ஊர் பையன் ஒருவர் அதை முகநூலில் பதிவு செய்ய ,அன்பு மகள் கெளதமி அது குறித்து தகவல் தெரிவித்தார். பின் நம் ஆய்வு மையம் சார்பில் அக்கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு இன்று செய்தி வெளியிடப்பட்டது.

தினகரன் செய்தி
தினமணி செய்தி
குற்றவாளிகள் குடியேற்றத்தை தடை செய்ததை சொல்லும் ஆறகழூர் கல்வெட்டு
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரில் சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,மருத்துவர் பொன்னம்பலம்,ஜீவநாரயணன்,கவிஞர் மன்னன்,புலவர் வீராசாமி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆறகழூர் வெளிப்பாளையம் அருகே உள்ள விளைநிலத்தில் கல்வெட்டு ஒன்றும்,நவகண்ட சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
கல்வெட்டு
95 செ.மீ நீளமும்,37 செ.மீ அகலமும்,20 செ.மீ தடிமனும் உள்ள ஒரு பலகைக்கல்லில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.முன்பக்கம் 16 வரிகளிலும் பின்பக்கம் 23 வரிகளிலும்,பக்கவாட்டில் 9 வரிகளிலும் கல்வெட்டு மூன்று பக்கங்களில் உள்ளது. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரர் என கல்வெட்டு துவங்குகிறது.இது 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாகும். ஆறகழூரில் இதுவரை தொல்லியல் துறையால் 48 கல்வெட்டுகளும், சேலம் வரலாற்று ஆய்வுமையத்தால் 5 கல்வெட்டுகளும் படிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்திலும் இல்லாத சில புதிய செய்திகளை இந்த கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. ஆறகழூரை மலாடாகிய ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்து ஆறகழூர் என எல்லா கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டானது மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர் என குறிப்பிடுகிறது.சோழர்கள்,வாணகோவரையர்கள்,பாண்டியர்கள்,விஜயநகரபேரரசு,நாயக்கர்கள் கல்வெட்டுகள் மட்டுமே இது வரை கிடைத்துள்ளது. வாண்டையார்களின் கல்வெட்டு இப்போதுதான் முதன்முறையாக கிடைத்துள்ளது. இந்த வாண்டையார்கள் நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர்.
குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார் ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்கு குமாரபாளையம் என்ற ஊரை தானமாக கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்ல குடியை சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாக குடியேற அனுமதி அளித்துள்ளனர். இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். வீடுகளில் துளையிட்டு திருடும் கன்னமிட்டவன், பயணத்தின் போது வழிமறித்து திருடும் வழிப்பறிச்சவன்,மற்றவர்கள் பொருட்களை அபகரிக்கும் எடுப்பு எடுத்தவன் போன்ற குற்றச்செயல்களை செய்பவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது என ஆணையிட்டு உள்ளனர். அங்கு குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்சியாக வாழ்வார்கள்.இந்த தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள்.இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே காராம் பசுவை கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது.
நவகண்ட சிற்பம்
இந்த கல்வெட்டுக்கு அருகிலேயே ஒரு நவகண்ட சிற்பமும் காணப்படுகிறது.போரின் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவைக்கு தன் உடலின் ஒன்பது பாகங்களை அரிந்து படையல் இட்டு தன்னைத்தானே பலி கொடுத்துக்கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்டுள்ள நவகண்ட சிற்பம் இதுவாகும்.இந்த வயல்வெளியில் கறுப்பு சிகப்பு பானை ஓடுகள் காணப்படுகின்றன. எனவே இந்த இடம் முன்பு மக்களின் வாழ்விடப்பகுதியாக இருந்தது உறுதியாகிறது. இந்த பகுதியில் மேலும் ஆய்வுகள் செய்தால் இன்னும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

http://cfcm.salemonline.in/article/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81---2614798?fbclid=IwAR3h3t4Qb8cbIncSASfjh58h22CRshFJFN_F_2AxYpd2aWgNaJ3mgHkZf9c

https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/dec/28/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3066497.html?fbclid=IwAR2pP_GQoyqYCDg4gcI7NmPeFDoUvyGNdStLmfdeoUCC5HpcAY1eKuc6rAE

https://www.vikatan.com/news/tamilnadu/145739-new-inscription-stone-discovered-near-salem.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வரஞ்சரம் லகுலீசர் - varanjaram lakuleesar

ஆறகழூர் பொன்.வெங்கடேசன் வரஞ்சரம் லகுலீசர்                                                           வரஞ்சரம் சிவன் கோயில் 10 நிமிடங்களில் கிடைத்த 10 நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எதிர்பாராமல் ஒன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்சிக்கு அளவே இல்லை.சில நாட்களுக்கு முன் குருநாதர் விழுப்புரம் வீரராகவன் ஐயாவும் நானும் தேடலுக்கு போய் ஒரு கல்வெட்டை படி எடுத்தோம். அருகே உள்ள ஒரு கோயிலுக்கு போக வேண்டும் என்பது நீண்டநாள் திட்டம். ஆனால் எப்ப போனாலும் அந்தக்கோயில் மூடியே கிடக்கும். அன்றும் அப்படித்தான் மூடி இருந்தது. அர்சகர் வீட்டை விசாரித்து அவரை நேரில் சந்தித்தோம். அவர் வெளியூர் கிளம்புகிறேன் இன்னொரு நாள் காலையில் சீக்கிரம் வாங்க என்று சொன்னார். ஐயா ரொம்ப தொலைவில் இருந்து வருகிறோம், ஒரு 10 நிமிடம் திறந்து விட்டால் பார்த்து விடுகிறோம் என அனுமதி வாங்கி உள்ளே சென்றோம். மளமளவென செல்லில் படங்களை சுட்டு தள்ளினேன். அர்ச்சகருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.வீட்டுக்கு வந்த பின் தான் ஒவ்வொரு படமாக பார்த்தேன். ஒரு படத்தை பார்த்தபோது உடலுக்குள் திடீரென ஒரு உற்சாகம் தொற்றியது. இவர் அவராக

சேலம் வரலாற்று ஆய்வு மையம்-பேளூர் மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு போர் நடந்ததிற்கான முதல் கல்வெட்டு ஆதாரம் சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. கி.பி. 2015 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் பேளூருக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு கல்வெட்டுக்கள் ஏதாவது கிடைக்குமா என தேடியபோது அங்காளம்மன் கோயில் முன்புள்ள பாக்குத்தோப்பில் ஓர் கல்வெட்டு இருப்பதாய் சொன்னார்கள். போய் பார்த்த போது அக்கல்வெட்டு பாதி பூமியில் புதைந்திருந்தது. அதை புகைப்படம் மட்டும் எடுத்து விட்டு வந்து விட்டேன். அதன் பின் சேலம் வரலாற்று தேடல் குழு என்ற அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது         சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்,   கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன் அய்யா துணைத்தலைவர்   கலைச்செல்வன் ஆசிரியர், செயலாளர் மருத்துவர் பொன்னம்பலம், இணைச்செயலாளர் பெரியார்மன்னன், பொருளாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் அடங்கிய குழு இக்கல்வெட்டை ஆய்வு செய்து மூக்கறுப்பு போர் நடந்ததற்கான  ஆதாரத்தை கண்டு பிடித்தது .இதைப்பற்றி சன்னல் இதழ் வெளியிட்ட கட்டுரை     கல்வெட்டின் மேல் சிவல

வீரகனூர் புத்தர்

  வீரகனூர் புத்தர் - மகதை மண்டலம் புத்தரின் கையில் காணப்படும் இந்த முக்கோணம் போன்ற குறியீடு நமக்கு சிறப்பான புதிய செய்தி ஏதாவது ஒன்றை சொல்கிறதா ??    சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆறகழூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக இருந்த ஊர் வீரகனூர் அங்கு உள்ள புத்தர் சிலை இது இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் ஆறகழூர் பொன்.வெங்கடேசன்